ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 48 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர். இவர்கள் செஞ்சி கோட்டை மற்றும் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு வந்தவாசி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இவர்கள் வந்த பேருந்து திருவண்ணாமலை தெள்ளூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிபாராத விதமாக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் பள்ளி மாணவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அப்பகுதிக்கு பொதுமக்கள் விரைந்து சென்று மாணவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் ஜேசிபி எந்திரம் மூலம் கவிழ்ந்து கிடந்த பேருந்தை மீட்டனர். பின்னர் அதே பேருந்தில் மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.