காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டு நெசவு தொழில் செய்து வரும் கணவன், மனைவி ஆகியோரை அரக்கோணம் அருகே உள்ள ஏரிக்கரை ஓரம் அடித்து கொலை செய்து முட்புதரில் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசன் தங்கள் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52) அவரது மனைவி ராணி (வயது 45) கணவன் மனைவி இருவரும் பட்டு நெசவு தொழில் செய்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். காஞ்சிபுரத்தில் வசித்து வந்த இந்த தம்பதியினர் தொழிலுக்காக தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் இந்த தம்பதியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரக்கோணம் அருகே சாலை மில்லன் ஏரிக்கரையில் உள்ள முட்புதரில் இருவரும் கொலை செய்யப்பட்டு அரைநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் தம்பதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ராணி அரக்கோணம் வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மின்னல் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த மின்னலான் என்பவரின் சகோதரி ஆவார். இதுகுறித்து பேசிய ராணியின் சகோதரர், “ தங்கையின் குடும்பத்தினர் கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் அவர்களை தொல்லை செய்து வந்ததாகவும் காஞ்சிபுரத்தில் இருந்து காரில் அரக்கோணத்திற்கு வந்தவர்கள் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக கூறினார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.