தவறுதலாக மருந்து சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதிலட்சுமி(26). இவர்களுக்கு திருமண மாகி 8 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை.
மேலும், ஜோதிலட்சுமிக்கு பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளானார். இதனால் அவர் வலியை குறைக்க வழக்கமான மருந்தை விட அதிகளவு சாப்பிட்டாராம்.
அதில் சிறிது நேரத்தில் வீட்டிலேயே அவர் மயங்கி விழுந்தார். பின்னர், வேலைக்கு சென்றிருந்த ராம்குமார் இரவு 8 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது மயங்கி கிடந்த மனைவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாலாஜா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.