ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஜோதி நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இவர் அரக்கோணம் ஜோதி நகர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த தனியார் ஆலை பேருந்து மோதி படுகாயமடைந்தார்.
தொடர்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட செந்தில்குமார் அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கும் போதே உயிரிழந்தார். இறந்த தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு சுஜாதா எனும் மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து விசாரணை நடத்திய அரக்கோணம் நகர காவல்நிலைய போலீசார் விபத்து ஏற்படுத்திய ஆலை பேருந்தை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநர் அரக்கோணம் குருவராஜபேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் (28) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.